வெள்ளி, 9 ஏப்ரல், 2010

திருவாசகம் (3) திருவண்டப் பகுதி




[தில்லையில் அருளியது]
சிவனது தூலசூக்குமத்தை வியந்தது
 திருச்சிற்றம்பலம்

            அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
            அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
            ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
             நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
    005  இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் 
உருண்டு   திரண்டு நெருப்பாய் இருப்பது சூரியன். அதனிடமிருந்து பிரிந்து
வந்து குளிர்ந்து இறுகியிருப்பது பூமி. அதே போன்று சுத்த சைதன்யமாய்
இருப்பது சிவம். அச்சிவனிடமிருந்து ஜட சக்தி வந்துள்ளது. ஜடசக்தி ஐந்து பூதங்களாயின. ஐம்பூதங்களிடமிருந்து எண்ணற்ற அண்டங்கள் உண்டாயின. அவையாவும் சிவனாருக்கு உடலாக அமைந்துள்ளன.ஆகையினால் அவைகளைத் திருஅண்டம் என்றழைப்பது முறை.[ அண்டம் = உருண்டை (அ) முட்டை]  அண்டம் என்னும் சொல் உருண்டை வடிவில்  இருப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது.
  
             பிரமாண்டமானது எண்ணற்ற கோள்களையுடையது. அக்கோள்களின் தன்மைகளை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியாது.அவைகளின் அழகும், சீரமைப்பும் கண்டு வியப்பதற்கும், ஆராயுமளவிற்கும் உரியவைகளாய் இருக்கின்றன.ஒவ்வொரு கோளிலும் ஒரு தனியழகு சிறக்கிறது. விளக்கிச் சொன்னால்  கோடிக் கணக்கில் அவைகள் விரிகின்றன.ஒரு ஓட்டையி வீட்டுக்குள் வருகின்ற சூரிய வெளிச்சத்தில்  அணுப்போன்ற தூசிகள் அலைந்து திரிவது காணப்படுகிறது.
  
             
             சிறிய வாகப் பெரியோன் றெரியின்
             வேதியன் றொகையொடு மாலவன் மிகுதியுந்
             தோறாமுஞ் சிறப்பு மீற்றொடு புணரிய 
            மாப்பே ரூழியு நீக்கமு நிலையும்
   010   சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்

அது போன்று  கோள்கள் வானில் மிதந்துக் கொண்டிருக்கின்றன. அளவில், சிறிய அணுவுக்கும்,   பெரிய அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும்.ஆராய்ந்து பார்ப்பவர்க்கு  இவ்வுண்மை விளங்குகிறது. எண்ணற்ற பிரம்மாக்களும், அவர்களுக்கு ஆதிமூலமாக இருக்கின்ற திருமாலும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும், பேரூழிக் காலமும் அதன் இருப்பும், முடிவும் ஆகிய இவை யாவும், ஈசனே! உன்னுடைய  பேர்வடிவின் பாங்காகும். வீசுகின்ற பெரிய சூறைக்காற்றானது,
               தெறியது வளியிற்
               கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
               படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
               காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
              கரப்போன் கரப்பவை கருதாக் 
    016   கருத்துடைக் கடவு டிருத்தகும்

அடியோடு பெயர்ப்பதைப் போல, எவராலும் அறிய இயலாத தனது சூக்கும வடிவத்தினால் எல்லாவற்றையும் அழிக்கவல்ல  நிரந்தரமான இளமையோடு இருக்கின்றவர் ஈசன்.  படைப்புக் கடவுளாகிய நான்முகனையும் படைக்கின்ற அநாதியானவன்.படைத்த பொருள்களைக் காக்கும் திருமாலையும் காப்பவன். காத்த பொருள்களை அழிப்பவன்.அழித்தப் பொருள்களை மீண்டும் தோற்றுவிக்க எண்ணாத நல் என்னத்தைக் கொண்ட பரம்பொருள்.

              அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
              வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
      019 கீடம் புரையுங் கிழவோ நாடொறும்
             அருக்கனிற் சோதி யமைத்தோன் றிருத்தகு
             மதியிற் றண்மை வைத்தோன் றிண்டிறற்
             றீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
            வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
    024  காலி னூக்கங் கண்டோ னிழறிகழ்

வேதத்திற்குஉடன்பாடான ஆறு சமயங்களை பழகுபவர்களுக்கு எல்லாம் முக்தியினைக் கொடுப்பவர் ஈசன்.( சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், ஸௌரம் - ஆகிய ஆறு மதங்கள் வேதத்திற்கு உடன்பாடானவை. ஈசனுடைய  பெருந் திட்டத்தில் எந்த மதமும் புறமதம் ஆகாது என்பது சான்றோர் கொள்கை.) தேவர் கூட்டம் முதல் புழு வரையில்

உள்ள எல்லா ஜீவர்களிடமும்  சமநோக்கு உடையவர் ஈசன்.சிவனே! நீ சூரியனிடத்தில் ஒளியை உண்டு பண்ணியிருக்கிறாய்.அழகு பொருந்தியுள்ள நிலவினிடத்தில் குளிர்ச்சியை அமைத்தாய். வலிய வெற்றியினையுடைய நெருப்பில் வெப்பத்தைத் தோற்றுவித்துள்ளாய். எங்கும் நிலைத்திருக்கும் ஆகாயத்தில் வியாபகத் தன்மையை அமைத்தாய். மேன்மை பொருந்திய காற்றில் வேகத்தைக் கொடுத்துள்ளாய்.

               நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
               மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென் 
               றெனைப்பல கோடி யெனைப்பல பிறவு
        028 மனைத்தனைத் தவ்வயி நடைந்தோ னஃதான்று  

குளிர்ச்சிப் பொருந்திய நீரில்  இனிய சுவையை வைத்துள்ளாய். பூமியிலே வலிமையை நீ வைத்துள்ளாய். இவ்வாறெல்லாம் உன் பெருமைகளை வேண்டியவாறு விளக்கிக் கொண்டே செல்லலாம். கோடிகணக்கில் அவைகள் விரிகின்றன. அவை யாவையும் நீ அவ்வவைகளுக்குரிய இடங்களில் வைத்துள்ளாய். அதற்கு மேலும் உன் பெருமை உள்ளது. 

               முன்னோன் காண்க  முழுதோன் காண்க
               தன்னே ரில்லோன் றானெ காண்க
               ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
              கானப் புலியுரி யரையோன் காண்க
             நீற்றோன் காண்க நினைதொறு  நினைதொறு
    034   மாற்றோன் காண்க வந்தோ கெடுவேன்

அனைத்துக்கும் ஆதிமூலமாய் இருப்பவனும் முழுமையுமாய் இருப்பவனும் காண்க.அவனுக்கு ஒப்பானவன் வேறு யாருமில்லை என்பதனை உணர்க. திருமால் வராக அவதாரம் எடுத்துச் சிவனின் அடி தேடிச் சென்றபோது, அந்த வராகத்தின் முற்றிய பற்களை அணிந்தவன் என்பதை நீ காண்பாயாக! தாருகா வனத்து முனிவர் விடுத்த புலியினைக் கொண்று, அதன் தோலையுரித்து ஆடையாக உடுத்திக் கொண்ட இடையினை உடையவன் என்பதை நீ காண்பாயாக! வெண்ணீற்றைப் பூசியிருப்பவன் என்பதை நீ காண்பாயாக. எண்ணுந்தோறும், எண்ணுந்தோறும் அவனது பிரிவினைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்பதை நீ காண்பாயாக. அவ்வாறாயின் , ஐயகோ நான் அழிவேன்.


                 இன்னிசை வீணையி லிசைத்தோன் காண்க
                 அன்னதொன் றவ்வய்யின்அறிந்தோன் காண்க
                 பரமன் காண்க பெரியோன் காண்க
                 பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
                 அற்புதன் காண்க அநேகன் காண்க
          040 சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 
                 சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க 
                 பத்தி வலையிற் படுவோன் காண்க
                 ஒருவன் என்னும் ஒருவன் காண்க
                விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
        045  அணுத்தருந்  தன்மையில் ஐயோன் காண்க
                இணப்பரும் பெருமையில் ஈசன் காண்க
                அரியதில் அரிய அரியோன் காண்க
                மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க
               நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
      050   மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க
                அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
                பந்தமும் வீடும் படைப்போன் காண்க
                நிற்பதுஞ் செய்வதும் ஆனோன் காண்க
               கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க
      055  யாவரும் பெறவுறும் ஈசன் காண்க
              தேவரும் அறியாச் சிவனே காண்க
              பெண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
              கண்ணால் யானுங் கண்டேன் காண்க
              அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
       060 கருணையின் பெருமை  கண்டேன் காண்க
              புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
              சிவனென யானுந் தேறினன் காண்க 
             அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
             குவளைக் கண்ணி கூறன் காண்க
             அவளுந் தானும் உடனே காண்க    


      செவி குளிரும் இனிய நாதமென இசைக் கருவியாம் வீணையில் பொருந்தி இருப்பவன் என்பதை நீ காண்பாயாக. அத்தன்மை உடையதாகிய ஒன்றினை அவ்விடத்தில் அறிந்தவனை நீ காண்பாயாக! எல்லோருக்கும் முன்னமே உள்ள ஆதிப் பரம் பொருள் என்பதை நீ காண்பாயாக!நான்முகனும், திருமாலும் காண்பதற்கு அரிய பெருமை உடையவன் என்பதை நீ காண்பாயாக. அதிசயமானவன் என்பதை நீ காண்பாயாக. வடிவங்கள் பலவாக விளங்குபவன் என்பதை நீ காண்பாயாக.சொல்லின் எல்லை மீறிய பழைமையானவன் என்பதை நீ காண்க! 
         உள்ளமும் சென்று உணர முடியாத மிகு தொலைவில் இருப்பவன் என்பதை நீ பார்ப்பாயாக!அடியாரின் அன்பு வலையில் சிக்கிக் கொள்பவன் என்பதை நீ காண்க! ஒப்பற்ற மேலான பொருள் என்றே அனைவரும் புகழ்ந்து ஏற்கும் தனிமுதலானவன் என்பதை நீ பார்ப்பாயாக.அகன்ற அண்டம் முழுவதுமாகப் பரவி நிறைந்தவன் என்பதை நீ காண்பாயாக!அணுவின் நுட்பத் தன்மையினும் அதிநுட்பமான தலைவன் என்பதை நீ காண்க!
         ஒப்பு நோக்க, அரிய பெருமையில் அவனே முதல்வன் என்பதை நீ காண்பாயாக. அரிய பொருள்களில் மிகவும் அரிய பொருளானவன் அவன் என்பதை நீ காண்க! பொருந்தி நின்று எப்பொருளையும் வளர்க்கின்றவன் என்பதை  நீ காண்பாயாக! நூலறிவாலும் அறியவியலாத நுட்பமானவன் அவன் என்பதை நீ காண்பாயாக.விண்ணொடு மண்ணாய் எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் பரவியிருப்பவன் அவன் என்பதை நீ காண்க!
            முடிவும், முதலும் ஆகிய இரண்டிலிருந்தும் நீங்கியவன் என்பதை நீ காண்பாயாக! அவரவர்களின் நல்வினை தீவினைகளுக்கு எற்றவாறு வீடு பேற்றையும், பந்தபாசமாகிய பிறவிப் பேற்றையும் வகுப்பவன் என்பதை நீ அறிவாயாக!அசையாப் பொருளாகவும், அசையும் பொருளாகவும் விளங்கி நிற்பவன் என்பதை நீ காண்க! யுகங்களின் தோற்றங்களையும், அவற்றின் முடிவுகளையும் கண்டவன் என்பதை நீ காண்பாயாக! எவரெவரும் அவரவர் எண்ணும் வண்ணமருளை வழங்கும் தலைவனென்பதை நீ காண்பாயாக!
           தேவர்கள் எல்லாரும் முயன்று அறியவியலாத தன்மையுடையவன் சிவனே என்பதை நீ காண்பாயாக.பெண்ணென்றும், ஆணென்றும், அலியென்றும் சொல்லப்படும் மூன்று பெருமைகளும் உடையவன் என்பதை நீ காண்பாயாக!என்னிரு கண்களாலும் நானும் கண்டேன் என்பதை நீ காண்பாயாக! அடியார்க்குத் திருவருளை மிகவாகப் பொழியும் அமுதமானவனே என்பதை நீ காண்பாயாக! அவனது அருளின் சிறப்பினை அடியேன் கண்டு கொண்டேன் என்பதை நீ காண்பாயாக!
           இவ்வுலகில் தன்னுடைய செம்மைத் திருவடிகளைப் பொருந்தச் செய்தவன் என்பதை நீ காண்பாயாக! அத்தன்மைப் பெற்ற அவனைச் சிவன் என்று நானும் தெளிந்தேன் என்பதை நீ காண்பாயாக! அச்சிவன் என்னை அடிமையாக்கி, ஆட் கொண்டு அருள் புரிந்தனன் என்பதை நீ காண்பாயாக! கருங் குவளை மலர் போன்ற கண்களை உடையவளாகிய உமை அம்மையைத் தனது இடப் பாகத்தில், உடலின் சரி பாதியாக் கொண்டவன் என்பதை நீ காண்பாயாக! அவ்வா ரு அம்மையும் அப்பனுமாக ஒன்றியிருப்பதை நீ காண்பாயாக!  

                 பரமா னந்தப் பழங்கட லதுவே
                 கருமா முகிலிற் றோன்றித்
                திருவார் பெருந்துறை வரையி லேறித்
                திருத்தகு மின்னொளிதிசைதிசை விரிய
       070   ஐம்புலப் பந்தனை வாளர விரிய
                வெந்துயர்க் கோடை மாத்தலைக் கரப்ப
                 நீடெழிற்  றோன்றி வாளொளி மிளிர 
                எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
               முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்     
      075   பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட  

          சிவ சக்தியின் ஐக்கியத்தினின்ற், பிரபஞ்சமெங்கும் பொலிகின்ற பரமானந்தம் பழைய ஆழ்கடல் போன்று அளப்பரியது.பெருத்த கருமையான மேகம் தோன்ரி நான்கு திசையிலும் பரவுவது போல்  பரமன் அழகு நிறைந்த திருப்பெருந்துறை மலையின் மீது ஏறி, தனது ஞான ஒளியினை எங்கும் ஒளிரச் செய்தான். உலகில் பந்தப் படுத்துகிற ஐம்பொறிகள் என்னும் ஒளி நிறைந்த பாம்புகள் அஞ்சி ஓடுகின்றன. வெம்மையான கோடைக் காலம் போன்று இருக்கின்ற கொடிய துன்பம் அழிந்து போகிறது.பேரழகுடைய செங்காந்தள் மலர்கள், மிக்க ஒளியினை மிளிரச் செய்கின்றன. மேலும் பிறவிகள் எடுப்பதில் எனக்கு அருவருப்பு மிக உண்டாகும் படிச் செய்து அருளினை. உலகம் அறியும் வண்ணம் பறையடித்து இறைவா, நீ என்னை பகிரங்கமாக ஆட் கொண்டு அருளினை.நான் கைகூப்பித் தொழுத காட்சியானது  இன்னும் மலராது கூம்ப்யிருந்த காந்தள் பூவின் தோற்றத்தை ஒத்திருந்தது.

             எஞ்சா வின்னரு ணுண்டுளி  கொள்ளச்
             செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட
                                                                                        வரையுறக்
            கேதக் குட்டங் கையற வோங்கி
            இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
   080   நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் 
           தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு
           மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன
           ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் 
           பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
   085 சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து
          ஊழூ ழோங்கிய நங்க
           ளிருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து
           உருவ வருனீ ரோட்டா வருவரை
           சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
   090   வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின்
             மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் 
             மீக்கொள மேன்மேன் மகிழ்தலி நோக்கி
             அருச்சனை வயலு ளன்புவித் திட்டுத்
             தொண்ட வுழவ ராரத் தந்த 
    095   வண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க.   

இறைவனது குறையாத இனிய அருள் ஆனந்தக் கண்ணீர் சொட்டும்படி செய்தது. துன்பம் என்னும் சிறுமை  செயலற்றுப் போய் அது பேரின்பமாக ஓங்கிற்று. பெரிய கண்களையுடைய மான் கூட்டம் கானல் நீரை மெய்யான நீரென்று எண்ணி அதை நாடிச் சென்று தாகம் தீராது தவித்தது. அது போன்ற் புறச்சமயம் ஆறனுள் புகுந்து கடுந்தவம் புரிந்தவர் பலர் பரமனது அருளுக்குப் பாத்திரமாகாது துன்பப் பட்டனர்.
(வேதத்திலும் கடவுளிலும் நம்பிக்கை வைக்காத சமயங்கள் புறச்சமயங்கள் எனப்படுகின்றன.  லோகாயுதம், பௌத்த மதத்தின் நான்கு கிளைகள், ஜைன மதம் ஆகிய இவை ஆறும் புறச் சமயங்கள் எனக் கருதப்பட்டு வந்துள்ளன ) 
விண்ணைத் தொடுகின்ற அம்மலையினின்று பெரிய ஆறு பெருக்கெடுத்து வந்தது. ஆனந்தத்தை ஊட்டும் பெரிய சுழிகள் அதில் உருவெடுத்தன. சுழித்துச்  சுழித்துப் புரண்டோடி வருகின்ற அப்பெரிய ஆறானது  என்னைப் பிறவியிலேயே கட்டுகின்ற பற்றுதல் என்னும் பெரிய கரையின் மேல் மோதி, அதை அசைத்து இடித்து வீழ்த்தியது.
எத்தனையோ பிறவிகளில் நம்மை வந்து சூழ்ந்த இருவினை ஆகிய பெரிய மரத்தினை வேரோடு பறித்துக் களைந்தது அவ்வெள்ளம். திருவருளாகிய நீரானது ஊடுருவிப் பாய்ந்து ஓடும்படிச் செய்தும், அருமையான மலை இடுக்கில் பெரியசி அணை கட்டிப் பரந்த நீர்த் தேக்கத்தைக் குளமாக அமைத்தும், தேனுடன் நறுமணத்தோடு கூடிய மலர்கள் தோன்றும்படி இறைவா, நீ அருளினை.  கரையிலே மக்கள் எரித்த அகில் கட்டையினின்று  கிளம்பிய நறுமணப் புகை படலம், படலமாகப் பரவிற்று. குளத்தினுள் வண்டினங்கள் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. இவை பார்க்கவும், கேட்கவும், முகரவும் தக்கனவாய் இருந்து மகிழ்வூட்டின.
வழிபாடு என்னும் வயலிலே அன்பு என்னும் விதையை இட்டு பரவெளியிலே ஒளிவிடுகின்ற பெரிய பொருளிடமிருந்து வருகின்ற சிவபோகம் என்னும் அமிர்தத்தை இறை அடியார்களாகிய உழவர்கள் விளைவித்தார்கள். அருள் பசியைனைப் போக்குவதற்கு அது( சிவபோகம்) ந்ல் உணவாகியது.
[ 83-95 அகவல் அடிகள் உலக நிலை, பக்தி நிலை, யோக நிலை  ஆகிய மூன்று நிலைகளில் வைத்துப் பொருள் படுத்துவதற்கு இடம் தருகின்றன. ]  

             கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
             அருந்தவர்க்கு அருளும் ஆதிவாழ்க
             அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
             நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க
    100   சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க
            வெய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
            கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
            பேரமைத் தோளி காதலன் வாழ்க
            ஏதிலர்க் கேதிலெம் மிறைவன் வாழ்க
   105   காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க   

கருநிறப் படத்தோடு கூடிய பாம்பை இடுப்பில் கச்சையாகக் கட்டிக் கொண்டிருக்கும் கடவுள் வாழ்க! அரிய தவம் செய்கின்ற தவசிகளுக்கு அருளும் முதல்வன் வாழ்க! மரண பயம் போக்கும் சேவகன் வாழ்க! எப்பொழுதும் அடியாரைத் தன்னிடம் ஈர்த்து ஆட்கொள்ளும் சிவன் வாழ்க! வளைத்துப் பிடித்திருக்கின்ற பெரிய வினையின் வேதனையை அகற்றுவோன் வாழ்க! தன்னை வந்தடைந்தோர்க்கு அரிய அருள் அமிழ்தத்தை வழ்ங்குவோன் 
வாழ்க! வணங்காது பாராமுகமாய் இருப்போர்க்குத் தீங்கு செய்யாத சிவன் வாழ்க! அன்புடன் நேசிப்பவர்க்கு வறுமை காலத்தில் உதவும் சிறந்த நிதி போல் உள்ள இறைவன் வாழ்க!   

              நச்சர வாட்டிய நம்பன் போற்றி
              பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
             நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி
                                                                                    நாற்றிசை
             நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
   110   நிற்பன நிறீ இச்   
            சொற்பதங் கடந்த தொல்லோன்

விஷமுடைய பாம்பை ஆட்டுகின்ற பூரணனே போற்றி! பக்தி மிகுதியால் என்னைப் பிடித்து பித்தனாக்கிய பெரியோனே போற்றி! திநீறு பூசித் தோன்றும் வலியோனே போறி! நான்கு திக்குகளிலும் நடமாடுபவைகளை நடமாடச் செய்பவனும், அசையாது கிடப்பவைகளை அந்நிலையில் வைத்திருப்பவனும்  ஆகிய ஈசனுக்கு வணக்கம். நிற்கின்றவைகளை சிவன் நிற்கச் செய்கிறான். பழம் பொருளாகிய அவன் சொல்லில் அடங்காதவ்ன் ஆவான்.

              உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
              கண்முதற் புலனாற் காட்சியு மில்லோன்
             விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
    115   பூவி நாற்றம் போன்றுயர்ந் தெங்கு
             மொழிவற நிறைந்து மேவிய பெருமை
              இன்றெனக் கெளிவந் தருளி
              யழிதரு மாக்கை யொழியச் செய்த 
                                                                          வொன்பொருள்
     120 அளிதரு மாக்கை செய்தோன் போற்றி
            ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
            ஆற்றா வின்ப மலர்ந்தலை செய்யப்
           போற்றா வாக்கையைப் பொறுத்தல் புகலேன்

ந்தக் கரணங்களாகிய மனம், புத்தி ஆகியவற்றிற்கு எட்டாதவன் ஈசன். புறக்காரணங்களாகிய கண், காது முதலியன கொண்டு அவனை அறிந்து கொள்ள இயலாது. ஆகாயம் முதலிய ஐம்பூதங்கள் , ஐம்பொறிகளுக்கு எட்டும் வண்ணம் ஈசன் அவற்றை அமைத்துள்ளான். மலரின்மணம் போன்று இருந்து ஈசன் தனது விபூதியைப் பிரபஞ்சம் எங்கும் நிறைத்து வைத்துள்ளான்.இன்று எளிதில் வந்து என்னை ஆட்கொண்டருளினை. அழியும் உடலைப் பற்றிய உணர்வை என்னிடமிருந்து நீக்கி வைத்தாய்.அத்தகைய செம்மையான பொருள் நீ!  இன்று எனக்காகவென்று எளிதி காட்சியளிப்பவனை வணங்குகிறேன்.பக்தியைப் பெருக்குவதற்கான அருள் உடம்பை என் பொருட்டு அமைத்துக் கொடுத்தவனுக்கு வணக்கம். அன்பு வடிவமாகிய சிவன்  உள்ளத்தினுள் அன்பாக ஊற்றெடுத்து ஆனந்தத்தைப் பெருக்குகிறான். அத்தகையோனுக்கு வணக்கம்.பேரின்பம் பெருகி அலைவீசிக் கொண்டு வந்து என்னைத் தன்மயமாக்குகின்ற போது அதனை ஏறுக் காப்பாற்றி வைக்க இயலாத ஊனுடலைச் சுமக்க நான் விரும்ப மாட்டேன்.


         மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்க
  125 மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
         திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்து
         முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்து
         ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்
         துற்றவர் வருந்த வுறைப்பவர்க் கொளித்தும்
 130  மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும்
         இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
         கத்தந் தித்தி னவ்வயி னொளித்து
         முனிவற் நோக்கி நனிவரக் கௌவி
         யாணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து
 135 வாணுதற் பெண்ணென வொளித்துஞ்
                                                                  சேண்வயின்
        ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
        துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
        யருந்தவர் காட்சியுட் டிருந்த வொளித்தும்
        ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்

பச்சைமணிக் குவியல், சிவப்பு மணிக் குவியல் ஆகிவற்றின் பிரகாசமும், மின்னலின் ஒளியும் தங்கத்தின் ஒளியும் ஒன்று சேர்ந்து திகழ்கின்ற தெய்வமே, புற நாட்டங் கொண்டு உன்னை வெளி உலகில் தேடுகிறவர்களுக்கு நீ காணப்படாமல் ஒளித்திருக்கிறாய். நூல்களில் சொல்லி வைத்துள்ள நன்னெறிகளை ஒழுங்காகப் பழகியவர்க்கும் காட்சிக்கு எட்டாதவன் பரமன். பந்த பாசத்தால் நட்பும்,  அனுதாபமும் கொண்ட உறவினர் மனம் வருந்தும்படி வெயிலில் கடுமையான தவம் செய்பவர்களாலும் காண இயலாதவன் ஈசன். சாஸ்திர அறிவைக்கொண்டு இறைவனைக் காண முல்கிறவர்களுக்கு அவன் அகப்பட மாட்டான். இவ்வகை வழிகளால் இறைவனைக் கண்ண்ட் விடலாம் என்று முயல்பவர்க்கு அவ்வழியிலேயே அங்கு அவன் மறைந்திருந்து காட்சிக்கு எட்டாதவன் ஆகிறான்.பேரூக்கத்துடன் உன்னை நன்றாய்ப் பற்றிப் பிடித்து ஆராய்ந்து பார்ப்பவர்க்கு நீ ஆணாக, அலியாக, பெண்ணாக விளங்குகிறாய்.பின் இவை யாவும் கடந்தும் இருக்கின்றாய். ஐம்பொறிகளின் செயல்களைத் தூர ஒதுக்கி வைத்து விட்டு, அரிய மலைகளிடையே சென்று, உணவையும் அறவே நீக்கி, வெறும் குற்றுயிர் பிடித்துள்ள கடுமையான தவசிகளிடையே தேங்கிய அறிவுக்கும் ஈசன் எட்டாதவன். அனைத்துக்கும் 
ஆதாரமாய் முழுமுதற் பொருள் ஒருவன் இருக்கிறான் என்று ஓர்ந்து கொள்ள இயலாத சிற்றறிவுக்கு ஈசன் எட்டாதவன் ஆகிறான்.


    140  பண்டே பயிறொறு மின்றே பயிறொறு
            மொளிக்குஞ் சோரனைக் கண்டன
            மார்மி னார்மி னாண்மலர்ப் பிணையலிற்
           றாடளை யிடுமின்
          சுற்றுமின் சூழ்மின் றொடர்மின் விடேன்மின் 
   145 பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்துந் 
          
முன்பு தோன்றிய நூல்களிலும், பின் தோன்றிய நூல்களிலும் கூறியபடி செய்ய முயன்று , கடவுளைக் காணுவதற்கு ஆரவாரமான வழிபாடுகளில் ஆரவாரியுங்கள். புதிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளைக் கொண்டு அவனது திருவடிகளைக் கட்டுங்கள். சுற்றுங்கள், சூழுங்கள், தொடருங்கள், விடாதேயுங்கள், பின்பற்றிப் பிடியுங்கள் என்றெல்லாம் முயல்பவர்க்கு ஈசன் அகப்பட மாட்டான்.


               தன்னே ரில்லோன் றானே யான தன்மை
              யென்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
              யறைகூவி யாட்கொண் டருளி
              மறையோர் கோலங் காட்டி யருளலு
     150  முளையா வன்பென் புருக வோலமிட்டு
             அலைகடற் றிரையினார்த் தோங்கித்
             தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்
             பித்தரின் மயங்கி மந்தரின் மதித்து
             நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்

சிவனே!உனக்கு நீயே ஒப்பு. உனக்கு ஒப்பானவர் யாருமில்லை. தன்னில் தானாகிய நி என் போன்ற அடியார்கள் உய்யும்பொருட்டு அந்தனன் வேடம் பூண்டு வந்து உன் பெருமையை புகட்டி அருளினை. என்னை நீ வலிய வந்து அழைத்து ஆட் கொண்டருளினதை வியந்து வருந்தி நான் அன்பினாற் எலும்பு உருகும்படி ஓலமிட்டு அழுதேன்.அலை வீசும் கடலில் எழும் ஓசை போன்று நான் புலம்புகிறேன்.அவ்வலை போன்று நான் தலைகீழாக வீழ்ந்து புரண்டு கத்துகிறேன்.பித்து பிடித்தவர் போல மயக்கம் கொண்டும் வெறிபிடித்தவர் போலக் களியாட்டம் காட்டியும் நான் என் பேருணர்வினை வெளிப்படுத்தினேன். இவற்றைப் பார்த்த ஊரார் திகைத்தனர்; கேல்வி பட்டவர் வியப்படைந்தனர். 

        155  கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தி
                னாற்றே னாக வவயவஞ் சுவைதரு
                கோற்றேன் கொண்டு செய்தனன்
               ஏற்றார் மூதூ ரெழினகை யெரியின்
                வீழ்வித் தாங்கன்
        160  றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடி 
                லொருத்தரும் வழாமை யொடுக்கினன்
                தடக்கையி னெல்லிக் கனியெனக் காயினன்  

மதம் பிடித்த ஆண் யானையானது தன் மீது பாகன் ஏறாதவாறு தன் தடுமாற்றத்தை வெளிபடுத்துவது போன்று என் நிலைமையும் உள்ளது.அன்பின் பெருக்கினால் என் உடம்பின் உறுப்புகளெல்லாம் கொம்புத் தேனில் ஊறவைத்ததைப் போன்று இனிக்கின்றன.அன்று தன் அழகிய புன்னகைத் தீயினால் பழமையான முப்புரங்களை எரித்ததன் வாயிலாகத் தன்னைப் புறக்கணித்து வாழ்ந்தவர்களை எல்லாம் துடைத்தருளினன். ஆனால் அவனின் அடியார்களாகிய எங்களிடம் பிறவி நோய்க்கு காரணமாயிருந்த பிரகதி என்னும் மலத்தைத் தன் அருள் என்னும் மெய்யறிவு என்னும் தீயினால் சுட்டெரித்து அவன் எங்களை முற்றிலும் ட்னன்வயமாக்கினான் என்னே! உள்ளங்கை நெல்லிக்கனி போல் இறைவன் எனக்கு முற்றிலும் காட்சி அளித்தான்.

             சொல்லுவ தறியேன் வாழி முறையோ
             தரியே னாயேன் றானெனைச் செய்தது 
   165   தெரியே னாவா செத்தே னடியேற்                               
             கருளிய தறியேன் பருகியு மாரேன்
             விழுங்கியு மொல்ல கில்லேன்
             செழுந்தண் பாற்கடற் றிரை புரைவித்
             துவாக்கட னள்ளும்நீ ருள்ளகந் ததும்ப

சுவானுபூதியில் சிவானந்த போகத்தை அனுபவிக்கப் பெற்ற நான் அதைப்பற்றி எப்படி எடுத்துரைப்பது என்பது அறியேன். இறைவனே! நீ வாழ்வாயாக! என்னை நீ ஆட்கொண்டது முறையோ அல்லவோ, நானறியேன். நீ என்னை ஆட் கொண்ட விதத்தை அற்பனாகிய நான் ஆற்றேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆ! ஆ! நான் செத்தேன். நீ அருள் புரிந்தது என் அறிவிற்கு எட்டாதிருக்கிறது.பருக, பருக அது தெவிட்டாதிருக்கிறது. உண்ண, உண்ண அது போதும் என்று சொல்லாதது.செழுமையும், குளிர்ச்சியையும் பொருந்திய பாற்கடலில் கிளம்பும் அலைகளைப் போன்றது ஈசனிடமிருந்து வருகிற பேரானந்தம். பௌர்ணமி அன்று கடலில் நீர் உயர்ந்திருபது போன்று என் உள்ளத்தினுள் ஆனந்தம் பொங்கி நிற்கிறது. 


   170   வாக்கிறந் தமுத மயிர்க்கா றோறுந்
            தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழைக்
            குரம்பை தோறு நாயுட லகத்தே
            குரம்பை கொண்டின்றேன் பாய்த்தி நிரம்பிய 
            அற்புத மான வமுத தாரைக
  175     ளெற்புத் துளைதொறு மேற்றின நுருகுவது
             உள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக்
             கள்ளூ றாக்கை யமைதன னொள்ளிய 
             கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
             யென்னையு மிருப்ப தாக்கின னென்னிற்
   180    கருண வான்றென் கலக்க 
             வருளொடு பராவமு தாக்கினன்
             பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.

சொல்லில் அடங்காத அமிர்த உருவமாகிய ஆனந்தம் மயிர்க்கால் தோறும் ததும்பி இருக்கும்படி ஈசன் செய்தான்.  வினையேனது தசையினால் கொழுத்த உடல்கள் அனைத்தினும் தகுதி அற்ற என்னுடலை   இருப்பிடமாகக் கொண்டு இனிய தேனை ஈசன் பொழிந்தான். அப்படி நிறைந்த வியக்கத்தக்க அமிர்த தாரைகளை எலும்பின் துவாரங்களில் எல்லாம் இறவன் ஏறப் பண்ணினான். அதை முன்னிட்டு உருகுவதாகிய மனதைக் கொண்டு ஒரு வடிவைச் செய்தாற்  போன்று    என்னிடம் அன்பு கசிந்து ஊறும் உடலை ஈசன் செய்தருளினான். அறிவுடைய யானையானது கரும்பையும், விளாங்கனியையும் தேடுவது போன்று தகுதி அற்ற  என்னையும் ஈசன் பேரானந்தத்தில் திளைத்திருக்கச் செய்தான். என்னிடத்தில் சிவஞானம் என்னும் தேனில் நிலைத்திருந்து நான் அமிர்த சொரூபம் ஆகும்படி ஈசன் செய்தருளினான். பிரம்மனுக்கும் திருமாலுக்கும் எட்டாத பேரியல்புடைய பெம்மான் எனக்கு எட்டியவன் ஆன்னான் என்னே!
                                                                        நன்றி --தவத் திரு சுவாமி சித் பவானந்தர். 

             





 



கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1