(தில்லையில் அருளியது )
சிவனது திருவட்புகழ்ச்சி முறைமை
திருச்சிற்றம்பலம்
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெறா விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகும்
5 துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடைய இருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
10 சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்
கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னோடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
15 இராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்தும்
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
20 உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
25 ஏறுடை ஈசனிப் புவனியை உய்யக்
கூறுடை மங்கையுந் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்பட்ச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
30 கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
35 அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டு கொண் டருள் அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
40 ஆண்டான் அங்கோர் அருள்விழி யிருப்பத்
துண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணா னாகிஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
45 குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
50 பூவன மதனிற் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச்சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
55 கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்
பூவலம் அதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசுந்
தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
60 விருந்தின னாகி வெண்காடதனில்
குருத்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
65 காடது தன்னிற் கரந்த கள்ளமும்
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரில் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
70 பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
75 இடைமரு ததனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தில் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
80 மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
85 ஐயா றதனில் சைவ னாகியும்
துருத்தி தன்னில் அருந்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்காதிருந்தும்
90 புறம்பய மதனில் அறம்பல அருளியும்
குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந் தருளி
95 எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் தழிந்துவந் தழகமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
100 மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
105 ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
110 கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்
மூல மாகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏல்வுடைத் தாக எழில்பெற அணிந்தும்
115 அரியொடு பிரமற் களவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
120 உத்தர கோச மங்கையூ ராகவும்
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
125 எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை யீங்கொழித் தருளி
130 அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்
135 கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி
நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்று
இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும்
140 எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொன்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
146 ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.

1 கருத்து:
நான் அறிந்திராத மாணிக்கவாசகரின் பாடல்கள்,எனக்கு இதுவரைத் தெரியாதவைகள்.அறிந்து கொள்ள இந்தத் தளம் உதவியது, நன்றிகள்
கருத்துரையிடுக