திங்கள், 19 ஏப்ரல், 2010

திருவாசகம் (04) போற்றித் திருவகவல்

 தில்லையில் அருளியது
சகத்தின் உற்பத்தி
திருச்சிற்றம்பலம் 

           நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
           ஈரடி யாலே மூவுல களந்து 
           நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
            போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
  005   அடிமுடி யறியும் ஆதர வதனிற்
           கடுமுரன் ஏன மாகி முன்கலந்து
           ஏழ்தலம் உருவ இடத்து பின்னெய்த்து
           ஊழி முதல்வ சயசய வென்று
           வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
010    வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்
     
          யானை முதலா எறும்பீ றாய
          ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
           மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
          ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
 015   ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

           இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
           மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
            ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் 
           அஞ்சு திங்களின் முஞ்சுதல்  பிழைத்தும்  
  020   ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்

           ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
           எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
           ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
           தக்க தசமதி தாயொடு தான்படும்
  025  துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
  
          ஆண்டுகள் தோறும் அடைந்தாக் காலை
          ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
          காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
         வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
  030 கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்

         ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
          கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணத்து
          எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
          ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்
  035  கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்
  
          பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள் 
          மந்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
          கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்   
          செலவ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
 040   நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்
  
          புல்வரம் பாய பலதுறை பிழைத்தும்
          தெய்வ மென்பதோட் சித்தமுண் டாகி      
          முனிவி லாததோர் பொருளது கருதலும்
          ஆறு கோடி மாயா சக்திகள் 
  045  வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

           ஆத்த மானார் அயலவர் கூடி
            நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
            சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
           பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
  050  விரத மேபர மாகவே தியரும்

         சரத மாகவே சாத்திரங் காட்டினர்
         சமய வாதிகள் தத்தம் மதங்களே
         அமைவ தாக அரற்றி மலைந்தனர்
        மிண்டிய மாயா வாத மென்னும்
055  சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து

        உலோகா யதனெனும் ஒண்திறற் பாம்பின்
        கலாபே தத்த கடுவிட மெய்தி
        அதிற்பெரு மாயை யௌனப்பல சூழவுந்
       தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
060 தழலது கண்ட மெழுகது போலத்

      தொழுதுள முருகி அழுதுடல் கம்பித்து
      ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
       கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
       படியே யாகிநல் விடையறா அன்பில்
 065 பசுமரத் தாணி அறைந்தாற் போலக்
  
       கசிவது பெருகிக் கடலென மருகி
       அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
       சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
       நாணது வொழிந்து நாடவர் பழித்துரை
070 பூணது வாகக் கோணுத லின்றிச்

        சதிரிழந் தறிமால் கொண்டு சாரும்
         கதியது பரம அதிசய மாகக்
         கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
         மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது
 075  அருபரத் தொருவன் அவணியில் வந்து

          குருபர னாகி யருளிய பெருமையைச் 
           சிறுமையென் றிகழாதே திருவடி யினையைப்
           பிறிவினை யறியா நிழலது போல
          முன்பின் னாகி முனியா தத்திசை
 080   என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி

         அன்பெனும் ஆறு கரையது புரள
         நன்புலன் ஒன்றி நாதவென் றரற்றி
         உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
        கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
 085  கண்களி கூர நுன்துளி அரும்பச் 


         சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
         தாயே யாகி வளர்த்தனை போற்றி
         மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
         கைதர வல்ல கடவுள் போற்றி
 090  ஆடக மதுரை அரசே போற்றி
  
          கூடல் இலங்கு குருமணி போற்றி
          தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
          இன்றெனக் காரமு தானாய் போற்றி
          மூவா நான்மறை முதல்வா போற்றி
 095   சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

          மின்னா ருருவ விகிர்தா போற்றி 
          கல்நார் உரித்த கனியே போற்றி
          காவாய் கனகக் குன்றே போற்றி

          ஆஆ என்றனக் கருளாய் போற்றி
 100   படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

          இடரைக் களையும் எந்தாய் போற்றி
          ஈச போற்றி இறைவ போற்றி
          தேசப் பளிங்கின் திரளே போற்றி
         அரசே போற்றி அமுதே போற்றி
 105   விரைசேர் சரண விகிர்தா போற்றி

          வேதி பொற்றி விமலா போற்றி
          ஆதி போற்றி அறிவே போற்றி
          கதியே போற்றி கனியே போற்றி
          நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
 110   உடையாய் போற்றி உணர்வே போற்றி

          கடையேன் அடிமை கண்டாய் போற்றி
          ஐயா போற்றி அணுவே போற்றி
          சைவா போற்றி தலைவா போற்றி
          குறியே போற்றி குணமே போற்றி
 115   நெறியே போற்றி நினைவே போற்றி

          வானோர்க் கரிய மருந்தே போற்றி
          ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
          மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
          ஆழா மேயருள் அரசே போற்றி
 120   தோழா போற்றி துணைவா போற்றி

          வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி
           முத்தா போற்றி முதல்வா போற்றி
          அத்தா போற்றி அரனே போற்றி
          உரையுணர்  விறந்த ஒருவ போற்றி
 125   விரிகடல் உலகின் விளைவே போற்றி

           அருமையில் எளிய அழகே போற்றி
           கருமுகி லாகிய கண்ணே போற்றி
           மன்னிய திருவருள் மலையே போற்றி
           என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
 130    சென்னியில் வைத்த சேவக போற்றி

          தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
          அழிவிலா ஆனந்த வாரி போற்றி
           அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
          முழுவதும் இறந்த முதல்வா போற்றி
 135   மானோர் நோக்கி முதல்வா போற்றி     
          
          வானகத் தமரர் தாயே போற்றி 
          பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
          நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
          தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
 140  வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

          வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
           அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
          கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
          நனவிலும் நாயேற் கருளினை போற்றி
 145  இடை மரு துறையும் எந்தாய் போற்றி

         சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி    
         ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
         சீரார் திருவை யாறா போற்றி
         அண்ணா மலையெம் அண்ணா போற்றி
 150   கண்ணார் அமுதக் கடலே போற்றி   

          ஏகம் பத்துறை  யெந்தாய் போற்றி
          பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
         பராய்த்துறை மேவிய பரனே போற்றி
         சிராப்பள்ளி மேவிய பரனே போற்றி
 155  மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி

         குற்றா லத்தெங் கூத்தா போற்றி
         கோகழி மேவிய கோவே போற்றி  
         ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
         பாங்கார் பழனத் தழகா போற்றி  
 160  கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
         
         அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
          இத்தி தன்னின் கீழிரு மூவர்க்கு
         அத்திக் கருளிய அரசே போற்றி
         தென்னா டுடைய சிவனே போற்றி
 165  எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
 
          ஏனக் குருளைக் கருளினை போற்றி
          மானக் கயிலை மயிலாய் போற்றி
          அருளிட வேண்டும் அம்மான் போற்றி
          இருள்கெட அருளும் இறைவா போற்றி
  170  தளர்ந்தே னடியேன் தமியேன் போற்றி

          களங்கொளக் கருத அருளாய் போற்றி
          அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி 
          நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
          அத்தா போற்றி ஐயா போற்றி
 175   நித்தா போற்றி நிமலா போற்றி
   
          பத்தா போற்றி பவனே போற்றி
          பெரியாய் போற்றி பிரானே போற்றி
          அரியாய் போற்றி அமலா போற்றி
          மறையோர் கோல நெறியே போற்றி
  180  முறையோ தரியேன் முதல்வா போற்றி

          உறவே போற்றி உயிரே போற்றி
          சிறவே போற்றி சிவமே போற்றி
          மஞ்சா போற்றி மணவாளா போற்றி
          பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
 185 அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

         இலங்கு சுடரெம் ஈசா போற்றி
         சுவைதலை மேவிய கண்ணே போற்றி
         குவைப்பதி மலிந்த கோவே போற்றி
          மலைநா டுடைய மன்னே போற்றி
  190 கலையா ரரிகே சரியாய் போற்றி

          திருக்கழுக் குன்றிற்  செல்வா போற்றி
          பொருப்பமர்  பூவணத் தரனே போற்றி
         அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
         மருவிய கருணை  மலையே போற்றி
 195  துரியமும் இறந்த  சுடரே போற்றி

         தெரிவரி தாகிய தெளிவே போற்றி
          தோளா முத்தச் சுடரே போற்றி
          ஆளா நவர்கட்  கன்பா போற்றி
          ஆரா அமுதே அருளே போற்றி
 200   பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி

           தாளின் அறுகின் தாராய்  போற்றி
           நீளொளி யாகிய நிருத்தா போற்றி
           சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
          சிந்தனைக் கரிய சிவமே போற்றி
 205   மந்திர மாமலை மேயாய்  போற்றி

          எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
          புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
          அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
         கருங்குரு விக்கன் றருளினை  போற்றி
 210  இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

         படியுறப் பயின்ற பாவக போற்றி
        அடியொடு நடுவீ றானாய் போற்றி
         நரகொடு  சுவர்க்கம் நானிலம் புகாமல் 
         பரகதி பாண்டியற் கருளினை போற்றி
 215  ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி

         செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
          கழுநீர் மாமலைக் கடவுள் போற்றி
          தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
          பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் 
 220   குழைத்தசொன்  மாலை கொண்டருள் போற்றி

          புரம்பல எரித்த புராண போற்றி
          பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
          போற்றி போற்றிபுயங்கப் பெருமான்
          போற்றி போற்றி புராண காரண
 225   போற்றி போற்றி சயசய போற்றி      
                 
                                                                                                                                                                                           திருச்சிற்றம்பலம்                                                                                          

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1