திருவெம்பாவை - பதினெட்டாம் பாடல்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றால் போல்
கண்ணார் இரவி கதிவந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரைகள்தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
திரு அண்ணாமலையானுடைய திருவடிகளில் சென்று வணங்கும் தேவர்களின் முடியில் அணிந்துள்ள இரத்திணங்கள் தம் ஒளியினை இழக்கின்றன. இருளை போக்கும் சூரியனும் சிவனின் முன் தன் ஒளியினை இழந்து விடுகிறான். விண்மீன்களும் ஒளியிழக்கின்றன. இறைவனோ பெண்,ஆண்,அலி ஆகிய அனைத்துமாயும், அவைகளுக்கு வேறாயுமாய் இருக்கின்றான்.ஒளியோடு பொருந்திய ஆகாயம், மண் முதலான பூதங்களாகி அவைகளுக்கு வேறாகவும் இருக்கிறான். அவன் அழிவில்லா அரிய பொருள். பெண்ணே, அவன் பெருமையை பாடி நீராடுவோமாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக